முதலில் கரீம் என்ற பெயரில் இருந்து ஆரம்பிக்கிறேன். கரீம் என்பதற்கு
generous என்று அர்த்தம். கதாநாயகனின் பாட்டனாரின் பெயர். அல்லது அவரும் கூட ஒரு
கதாநாயகன் என்றே சொல்லலாம். அடுத்தது கதாநாயகனின் பெயர் ஃபைசல். அதற்கு decisive
என்று அர்த்தம் கொள்ளலாம். கதாசிரியர் அஞ்சலி மேனன் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்
என்பதற்கு இவை சில உதாரணங்கள். ஒப்பீட்டளவில் உஸ்தாத் ஓரளவுக்கு நமக்குப்
பரிச்சயமான வார்த்தை. அதற்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை!
ஒரு ஹாஸ்யமான கதை என்பது போல அமைந்த தொடக்கம். ஆனால் விஷய கனத்துடன்
மனநிறைவைத் தரும் முடிவு என்று திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடி
இருக்கிறார்கள். கதாநாயகி ஒரு interior designer என்று போகிற போக்கில் அறிமுகமாகிறார்.
படத்தில் ஒரு பூனை வருகிறது. கதாநாயகனுக்கு ஒரு band- இன் அறிமுகம் கிடைக்கிறது. இவை
எல்லாமே பின்னர் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திரைக்கதையைப் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை!
‘ஃபைசலின் கதை அவன் பிறக்குமுன்பே தொடங்கிவிட்டது’ என்று பின்னணியில்
ஒரு குரல் கதையை ஆரம்பித்து வைப்பதும் படத்தின் இறுதிப்பகுதிகளில் ‘எல்லாம்
விதிப்படி’ என்று ஃபைசல் தெளிவதும் பொருத்தம்.
‘சுபானல்லா சுபானல்லா’ என்ற பாடல் பின்னணயில் ஒலிக்கக் கோழிக்கோடு
கடற்கரையில், விடிகாலையில் கரீம் சுலைமானியைச் சுவைக்கும் இடத்தில் இருந்து கதை
சூடு / சுவை பிடிக்க ஆரம்பிக்கிறது. கெட்டிலில் இருந்து உதிக்கும் சூரியனின்
பின்னணியில் கிளாசில் ஊற்றப்படும் சுலைமானியைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில்
ஊறியது.
‘பூமியில் சொர்க்கம் என்று ஒன்று உண்டென்றால் அது இங்கேதான் அது
இங்கேதான் அது இங்கேதான்’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் முழுதும் குரலில்
உற்சாகம். காட்சிகளில் ஒருவித பரவசம். தொடர்ந்து வரும் காட்சிகளில் பிரயாணி
ரெடியாகிறது. விடிகாலைக் கோழிக்கோடு அழகாக இருக்கிறது. மொத்தம் ஐந்து அல்லது ஆறு
நிமிடங்களுக்கு வரும் அந்தப் பாடலும் காட்சிகளும் திரும்பத் திரும்பப் பார்க்கத்
தூண்டுபவை.
அதன்பிறகு கதை நகரும் வேகமே தெரிவதில்லை. ஓட்டல் பற்றிய காட்சிகள்
பிரயாணி என்றால் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான காட்சிகள் சுலைமானி போல. மிகப்
பொருத்தம்.
திரைக்கதைக்குச் சற்றும் குறைவில்லாத வசனங்கள். 'பாலையில் மழை பெய்த
நாளில் சொர்க்கம் தூரத்தில் இல்லை' என்று கண்டுணர்ந்ததாகக் கரீம் சொல்லுமிடம்
கவிதை. மேலும் சில உதாரணங்கள் சொல்லலாம்.
‘வயிறோடு மனத்தையும் நிறைப்பவனே நல்ல சமையல்காரன்’
‘மனிதனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. சாதம் கொடுத்தால் மட்டுமே ஒரு
கட்டத்திற்கு மேல் போதும் என்று சொல்வான்’
(மற்ற தானங்களை விட அன்னதானம் பெரிதாகப் போற்றப்பட இதுவும் ஒரு காரணம்
என்றே நினைக்கிறேன்).
படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவ்வப்போது ஒரு விஷயம் குறுகுறுத்தது.
‘கரீம் செய்வது சரியா?’ என்பதே அது. அவர் செய்வது ஒரு விதத்தில் ‘moral hazard’ –
இற்கு வழிவகுக்குமே என்று தோன்றியவண்ணம் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சிகளில் இந்த
எண்ணம் மேலும் வலிவு பெற்றது. இந்த எண்ணம் மேசையின் இந்தப் பக்கம் இருக்கும் என்
போன்றவர்களுக்கு என்றே நினைக்கிறேன். மேசைக்கு அந்தப் பக்கம் இருக்கும் கரீம்,
நாராயணன் போன்றவர்களுக்கு இல்லை. நிஜ வாழ்வில் ஜெமோ வாயிலாக அறிந்துகொண்ட ‘கெத்தேல்சாகிபை’ உதாரணமாகச் சொல்லலாம்.
ஒரு மாலைப்பொழுதில் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் இரவில்
உறக்கத்தில் நல்ல கனவுகள் வரலாம். பகலில் பார்த்தால் அந்த நாள் உற்சாகமான ஒன்றாக
இருக்கும்!